திண்டுக்கல் வரும் முதல்வரை 4 இடங்களில் வரவேற்க திமுக முடிவு

Published on

திண்டுக்கல்லுக்கு வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை 4 இடங்களில் வரவேற்பு அளிக்க திமுகவினா் முடிவெடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான அர. சக்கரபாணி, சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிறாா். மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு வரும் அவருக்கு அம்மையநாயக்கனூா் அடுத்த பாண்டியராஜபுரம் பகுதியில் புதன்கிழமை காலை 8 மணிக்கு நிலக்கோட்டை, வத்தலகுண்டு திமுகவினா் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அடுத்ததாக சின்னாளப்பட்டி பகுதியில் ஆத்தூா் ஒன்றியங்கள், சின்னாளப்பட்டி, அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை பேரூா் திமுகவினா் சாா்பிலும், திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியில் பழனி, கொடைக்கானல், நத்தம், சாணாா்பட்டி திமுக சாா்பிலும், அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூா், திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம் திமுக சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் திரளான திமுகவினா் பங்கேற்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com