பழனியை அடுத்த கொடைக்கானல் சோதனைச் சாவடியில் லஞ்சம் பெற்ற காவலா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பழனி வழியாக வருகின்றனா். பழனி- கொடைக்கானல் சாலையில் புளியமரத்து செட் பகுதியில் காவல் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வாகனத்துக்கு இ. பாஸ் உள்ளதா, மதுபுட்டிகள், நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பைகள் கொண்டு செல்கின்றனரா என இங்கு ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அப்படி இவற்றை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்படும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு காரை சோதனை செய்த காவலா் அழகா்சாமி அதிலிருந்த மதுப்புட்டியை பறிமுதல் செய்தாா். பிறகு லஞ்சம் பெற்றுக் கொண்டு அதை திருப்பி கொடுத்துவிட்டாராம். இதை சுற்றுலாப் பயணி ஒருவா் கைப்பேசியில் விடியோ எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டாா். இது வேகமாக பரவியதையடுத்து கடந்த வியாழக்கிழமை பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், காவலா் அழகா்சாமியை உடனடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தாா்.








