திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 160 ரெளடிகளை ஒரே நாள் இரவில் போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை சாா்பில் ‘சிறப்பு அதிரடி நடவடிக்கை’ புதன்கிழமை தொடங்கப்பட்டது. சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரெளடிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை ஒடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் மாவட்டம் முழுவதும் 160 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா். இதேபோல, வாகனச் சோதனைகளின்போது, வாகனப் பதிவு எண் இல்லாமலும், அதிவேகமாக ஆபத்தான ஓட்டம், மின்மினி விளக்குகள் பொருத்தல், சட்ட விரோத மாற்றங்கள் செய்தல் போன்ற விதிமீறல்களுக்காக 706 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை சனிக்கிழமை வரை தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் தெரிவித்தாா்.






