மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிவரும் "பேட்டரி கார்'களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு

 மதுரை, மே 25: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை வீதிகளில் இயக்கப்படும் பேட்டரி கார்களுக்கு (படம்) மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.  ஆனால், இத்திட
Updated on
1 min read

 மதுரை, மே 25: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை வீதிகளில் இயக்கப்படும் பேட்டரி கார்களுக்கு (படம்) மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.

 ஆனால், இத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைச் சுற்றிலும் சித்திரை வீதிகள் உள்ளன. இவற்றை அழுகுபடுத்தும் விதமாக டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக கோயில் மதில் சுவர்களைச் சுற்றிலும் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் சித்திரை வீதிகளில் சிரமமின்றி சென்று கோபுரங்களைக் காண்பதற்கு வசதியாக, "பேட்டரி கார்' திட்டம் கடந்த ஏப்ரல் முதல் செயல்படுத்தப்பட்டது.

 தற்போது 3 பெரியது, 1 சிறியது என 4 கார்கள் இயக்கப்படுகின்றன. மதுரை மாநகராட்சி சார்பில் பேட்டரி சார்ஜ் செய்து இக்கார்கள் இயக்கப்படுகின்றன.

 கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி வர பெரியவர்களுக்கு ரூ.10, 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கிழக்குச் சித்திரை வீதியிலிருந்து இயக்கப்படும் இக்கார்களில் பெரியவற்றில் 8 பேரும், சிறியதில் 5 பேரும் பயணம் செய்யலாம்.

 மின்னணு முறையில் கட்டண டிக்கெட் அளிக்கப்படுகிறது. தினமும் இக்கார்கள் மூலம் கோயில் கோபுரத்தை 2,000 -க்கும் மேற்பட்டோர் கண்டு களிப்பதாக காரை இயக்குபவர்கள் கூறுகின்றனர்.

 அதாவது, ஒவ்வோர் காரும் தினமும் 40 சுற்றுகளாவது பயணிகளோடு கோயிலைச் சுற்றிவருவதாகவும், அதன்படி இக்கார்கள் மூலம் மாநகராட்சிக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை தினமும் வருவாய் கிடைப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

 அதன்படி பார்த்தால் மாதத்துக்கு இக்கார்கள் மூலம் குறைந்தது ரூ.1.20 லட்சம் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைத்துவருகிறது. மேலும் இக்கார்களை திருமலைநாயக்கர் மகால், காந்தி மியூசியம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிவருகின்றனர்.

 இப்படிப்பட்ட நிலையில் பேட்டரி கார்களை இயக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 தற்போது பேட்டரி கார்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் டிக்கெட் அளிப்போர் என 10 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 3000 அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் மூலமே டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 தனியாரிடம் இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டால் ஆண்டுக்கு குறைந்தது ரூ.10 லட்சத்துக்கும் மேலாக மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

 இதுகுறித்து விவரம் கேட்க, மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

 இத்திட்டத்தை மாநகராட்சி தொடர்ந்து நடத்துவதுடன் முறையான அறிவிப்பு விவரங்களை கோயில் பகுதியில் வைக்கவேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com