கடவுச்சீட்டில் பெயர் திருத்தம் செய்ய வாய்ப்பு

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் பெயர் திருத்தம் செய்வது தொடர்பான  வழிமுறைகள் குறித்து மதுரை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் பெயர் திருத்தம் செய்வது தொடர்பான  வழிமுறைகள் குறித்து மதுரை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணீஸ்வரராஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் கடவுச்சீட்டில் பெயர் உச்சரிப்பு மாற்றமின்றி பெயரில் திருத்தம் செய்ய, குடும்ப பெயர் சேர்க்க அல்லது நீக்குவதற்கும், திருத்தம் செய்வதற்கும் நாளிதழில் விளம்பரம் செய்து சமர்பிக்கத் தேவையில்லை.

பெயர் திருத்தம்: பெயர் உச்சரிப்பில் மாற்றம் இல்லாமல், அதில் உள்ள எழுத்துப்பிழை, எழுத்து மாற்றங்களை கடவுச்சீட்டில் சரிசெய்ய விண்ணப்பதாரர்கள் அரசு வழங்கிய ஏதேனும் இரண்டு ஆவணங்களுடன் பள்ளி சான்றிதழ்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

குடும்பப் பெயரில் மாற்றம் அல்லது சேர்த்தல்: திருமணத்தால் குடும்பப் பெயரில் உண்டாகும் மாற்றங்களைச் சேர்த்தல் ஏதேனும் இருந்தால் விண்ணப்பதாரர்கள் குடும்பப் பெயர், கணவன், மனைவி பெயர், பெற்றோர் பெயர் என அதற்கான ஆவணங்கள் மற்றும் மாற்றம் செய்வதற்கான காரணங்களையும் விண்ணப்பத்தோடு சமர்ப்பிக்க வேண்டும்.

பெற்றோர் பெயரில் திருத்தம்-மாற்றம்: கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெற்றோர் பெயரில் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்ய பெற்றோரின் கல்விச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளோடு விண்ணப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் ஆவணங்களில் விண்ணப்பதாரரின் பெயர் மாறுபட்டால் படிவம் இ மற்றும் அரசு வழங்கிய இரண்டு ஆவணங்கள் கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் உள்ள பெயரில் சமர்பிக்கப்பட வேண்டும். இதன்பின் காவல்துறையின் அறிக்கை பெறப்பட்ட பின்பே கடவுச்சீட்டு வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் பெயரில் முழுமையாக மாற்றம் இருந்தால் இரண்டு முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும். அதனுடன் படிவம் இ பூர்த்தி செய்து கடவுச்சீட்டு விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும். அதே சமயத்தில் பெயர் மாற்றம் செய்ததற்கான அரசிதழை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கத் தேவையில்லை. மேற்கண்ட அனைத்து பெயர் மாற்றத்திற்கும் காவல்துறையின் அறிக்கை பெற்ற பின்பே கடவுச்சீட்டு வழங்கப்படும்.

 ஆள்மாறாட்டம், போலியான பெயர் சான்றிதழ்போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோருக்கு இந்த நடைமுறைகள் பொருந்தாது.

அவ்வாறு தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடவுச்சீட்டு விதிகளின்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com