வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருசநாடு மலைப் பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு, போடி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் கொட்டகுடி ஆறு, கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் வரும். அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
மழையின்றி, மூல வைகை மற்றும் கொட்டகுடி ஆறுகள் தற்போது வறண்டுவிட்டன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மட்டுமே வைகை அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கேரளத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 8 ஆம் தேதி தென்மேற்கு பருமழை தொடங்கினாலும், முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வரத்து உள்ளது. அணை நீர்மட்டம், வெள்ளிக்கிழமை 112.25 அடியாக இருந்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 100 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டும், வைகை அணைக்கு தண்ணீர் வந்துசேரவில்லை.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, வைகை அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை 33.33 அடியாக இருந்தது. அணையில் தண்ணீர் இருப்பு 518 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதால், அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு தினமும் விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கூறியது: முல்லைப் பெரியாறு அணைக்கான தண்ணீர் வரத்துக்கு ஏற்பவே அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க முடியும். வைகை அணையில் போதிய தண்ணீர் இருப்பில் உள்ளதால் குடிநீர் திட்டங்களுக்குப் பிரச்னை இல்லை என்றனர்.
முதல்போக நெல் சாகுபடிக்கும் சிக்கல்
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் போதிய தண்ணீர் வரத்தின்றி அணையில் தற்போது 1,271 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு அணையில் இருந்து வழக்கம் போல ஜூன் மாதம் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவிலான முதல் போக நெல் சாகுடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளம் மற்றும் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்தால் மட்டுமே குடிநீர் மற்றும் பாசனத்திற்கு சிக்கல் நீங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.