மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுப் பணம் உள்பட ரூ.2.14 லட்சத்தை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சொக்கிக்குளம் கோகலே சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணப்பெருமாள் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 470 இருந்துள்ளது. மேலும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு நோட்டுகளும் இருந்துள்ளன.
இதையடுத்து காரில் வந்த எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக பணம் கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.2.14 லட்சத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் தகுந்த ஆவணங்களுடன் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி சுப்பிரமணியனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.