மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆசாத் தெருவில் தனியார் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததால், அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் அலுவலக மேஜை, நாற்காலிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கணினிகள் சேதமடைந்தன. குளிரூட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.