பணம் கையாடலைக் கண்டித்த மேலாளருக்கு கத்திக்குத்து: ஓட்டல் ஊழியர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:41 AM | Last Updated : 04th January 2019 07:41 AM | அ+அ அ- |

மதுரையில் தனியார் உணவு விடுதியில் பணம் கையாடல் செய்ததை கண்டித்த மேலாளரை கத்தியால் குத்திய ஊழியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
மதுரை திருநகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (37). இவர் மதுரை மேலக்கால் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே விடுதியில் தவிட்டுச்சந்தையைச் சேர்ந்த சேஷன் பாபு (36) உணவக பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உணவகத்தில் உள்ள பணத்தை சேஷன்பாபு கையாடல் செய்ததை விஷ்ணுகுமார் கண்டுபிடித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இரவு விடுதியில் பணிமுடிந்து விஷ்ணுகுமார் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். அப்போது காரை வழிமறித்த சேஷன்பாபு உள்ளிட்ட மூவர், விஷ்ணுகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக விஷ்ணுகுமார் அளித்தப்புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேஷன்பாபுவை வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.