அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 03rd July 2019 08:43 AM | Last Updated : 03rd July 2019 08:43 AM | அ+அ அ- |

பல்கலைக் கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு 2009-ல் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின்பிரிசில்டா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:
ஆசிரியர் பணி என்பது உயர்வான பணியாகும். வகுப்பறைகளில் கற்பிப்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையைக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழுநேரக் கல்லூரிகளில் முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்த வெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள். இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.