சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 14th June 2019 10:02 AM | Last Updated : 14th June 2019 10:02 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எரிவாயு குழாய் வழித்தடம் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள் வாழ்விடம் வழியாக அமைய உள்ளது.
இந்த வழித்தடத்துக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழங்குமுறை வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியும் பெறவில்லை.
இந்த திட்டத்தின் கீழ் விளை
நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு, முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
பறவைகள் சரணாலயம், பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம். எனவே ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.