குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம்: சாலைப் பணியாளர் சங்கம் தீர்மானம்
By DIN | Published On : 15th May 2019 06:43 AM | Last Updated : 15th May 2019 06:43 AM | அ+அ அ- |

சென்னையில் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று சாலைப் பணியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் டி.மனோகரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் இரா.தமிழ் கோரிக்கையை விளக்கிப் பேசினார். கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெற ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியத் தொகுப்பிலிருந்து மாத ஊதியம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிர் நீத்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை விட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது, போராட்டத்தில் அனைத்து உட்கோட்ட சாலைப் பணியாளர்களும் குடும்பத்தினருடன் பங்கேற்பது, போராட்டத்தை விளக்கி மே 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை உட்கோட்டங்களில் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் சோலையப்பன் உள்ளிட்ட வட்டக் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.