மூடப்பட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
By DIN | Published On : 19th May 2019 07:31 AM | Last Updated : 19th May 2019 07:31 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வரகனூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள கருவேலம் மரங்களை மே 15-ஆம் தேதி வெட்டுவதற்காக மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் 6 பேர் சென்றனர். அங்கு, வெடிமருந்து இருந்த அறையின் அருகில் மதியம் உணவு சமைத்துள்ளனர். அப்போது தீப்பொறி காற்றில் பறந்து வெடி மருந்து இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையிலிருந்த வெடி மருந்து வெடித்து கட்டடம் தரைமட்டமானது. மேலும் மரம் வெட்டச் சென்ற 6 பேரும் தீக்காயமடைந்தனர்.
இதையடுத்து, 6 பேரையும் மீட்டு சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோபால், குருசாமி, கனகராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மே 15- ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.