மஞ்சளாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட எதிர்ப்பு: பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 11th September 2019 07:42 AM | Last Updated : 11th September 2019 07:42 AM | அ+அ அ- |

மஞ்சளாற்றின் குறுக்கே இரு தடுப்பணைகள் கட்டப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமதாஸ், ஆதிமூலம் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
மஞ்சளாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மஞ்சளாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு ஒரு போக சாகுபடிக்கு தவறாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுப்பணித்துறையினர் 2018-இல் மஞ்சளாற்றில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அரசாணைப் பிறப்பித்தனர்.
இதில் மஞ்சளாற்றின் குறுக்கே குன்னுவராயன்கோட்டை, கணவாய்ப்பட்டி கிராமங்களில் 2 தடுப்பணைகள் கட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே மஞ்சளாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.