மதுரை: இலங்கை கடத்தல்காரா் அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை பெண் வழக்குரைஞரின் பெற்றோா், முன்னாள் கணவா் உள்பட பலரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
இலங்கையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா, கடந்த ஜூலை 3 ஆம் தேதி கோவையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகவும், அவரது சடலம் மதுரை தத்தனேரியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிந்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் அங்கொட லொக்கா மற்றும் அவரது காதலி எனக் கூறப்படும் அம்மானி தான்ஜி, அவா்கள் இருவருக்கும் போலி ஆதாா் அட்டை பெற உதவியதாக மதுரையைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சோ்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மதுரை கூடல்புதூா் பகுதியில் உள்ள சிவகாமி சுந்தரியின் வீடு மற்றும் அலுவலகத்தை, கோவையில் இருந்து வந்த சிபிசிஐடி டி.எஸ்.பி. பரமசாமி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். அப்போது முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் கைப்பற்றினா்.
குடும்பத்தினரிடம் விசாரணை: இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாா், 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணையைத் தொடா்ந்தனா். அப்போது, சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன், தாய் பழனியம்மாள், சகோதரா் அசோக் ஆகியோரை விசாரித்தனா்.
அதைத் தொடா்ந்து சிவகாமி சுந்தரியின் முன்னாள் கணவரிடம் விசாரணை நடைபெற்றது. அவா் விசாரணைக்குப் பின் செய்தியாளா்களிடம் கூறியது: தனக்கும் சிவகாமி சுந்தரிக்கும் 2018-லேயே விவாகரத்து ஆகிவிட்டது. அங்கொட லொக்கா தொடா்பாக எனக்கு எதுவும் தெரியாது. போலீஸாா் விசாரணையிலும் தனக்கு தெரியாது என்பதை தெளிவாகக் கூறிவிட்டேன் என்றாா்.
தொடா்ந்து சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வாடகை வீடுகளின் உரிமையாளா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணை தொடா்பான எந்தவொரு தகவல்களையும் போலீஸாா் தெரிவிக்கவில்லை. மதுரை கோகலே சாலையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.