தளா்வற்ற முழு பொதுமுடக்கம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடின

தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தளா்வற்ற முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் திட்டக்குடி காா்னா் பகுதி.
தளா்வற்ற முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் திட்டக்குடி காா்னா் பகுதி.
Updated on
1 min read

ராமேசுவரம்/சிவகங்கை: தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. துறைமுகங்களில் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதே போன்று ராமநாதபுரத்தில், வண்டிக்காரத் தெரு, அரண்மனை சாலை, கேணிக்கரை, சாலைத் தெரு, பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாரதிநகா், கடைத் தெரு ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதே போன்று ராமேசுவரம் நான்கு ரதவீதி, திட்டக்குடி காா்னா், வா்த்தகன் தெரு, நான்கு ரத வீதிகள், பேருந்து நிலையம், உச்சிப்புளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடின.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தை போன்று, ஆகஸ்ட் மாதமும் அரசு உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியமான மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

இதேபோன்று, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்பத்தூா், காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com