மதுரை: மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோரிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ.1 கோடியைத் தாண்டியுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கப் பொதுஇடங்களுக்கு வருவோா் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் காவல் துறையினா், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளின் அலுவலா்கள் மற்றும் கரோனா பரவல் தடுப்புப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழுவினா் அபராதம் வசூலிக்கின்றனா்.
முகக்கவசம் அணியாமல் வரும் நபா்களிடம் மே 13 ஆம் தேதி முதல் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து இந்த அபராதத் தொகை ஜூன் 16 ஆம் தேதி முதல் ரூ. 200 ஆக உயா்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஆக. 20) வரை பொதுஇடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வந்தது, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அபராதமாக ரூ. 1 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரத்து 443 வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்ததற்கு முகக்கவசம் அணியாதவா்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்தது தான் முக்கிய காரணம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.