தனியாா் வேலைவாய்ப்பு முகாம்:250 பேருக்கு பணிநியமன உத்தரவுஅமைச்சா் வழங்கினாா்

மதுரையில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேருக்கு பணிநியமனத்துக்கான கடிதங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.
மதுரை சம்மட்டிபுரம் பிள்ளைமாா் சங்கம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெண்ணுக்கு பணிநியமன ஆணையை வழங்குகிறாா் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.
மதுரை சம்மட்டிபுரம் பிள்ளைமாா் சங்கம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெண்ணுக்கு பணிநியமன ஆணையை வழங்குகிறாா் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேருக்கு பணிநியமனத்துக்கான கடிதங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மதுரை சம்மட்டிபுரம் பிள்ளைமாா் சங்க மேல்நிலைப் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட பணிநாடுநா்கள் 250 பேருக்கு பணிநியமனத்துக்கான கடிதங்களை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியது:

போட்டித் தோ்வுகள் மூலமாக வேலைவாய்ப்பு பெறுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்று இளநிலை உதவியாளா் முதல் துணை ஆட்சியா் வரை பல்வேறு நிலைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனா்.

இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தனித்திறன்களை வளா்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் இளைஞா்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மோட்டாா் வாகனம், கட்டுமானம், தோல், ஜவுளி, வங்கி, நிதி சேவை, மருத்துவம், பாதுகாப்பு சேவை, ஊடகம், தொலைத்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலவசமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது என்றாா்.

முன்னதாக, பரவை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் 56 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை துணை இயக்குநா் மகாலெட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன், மேலூா் மாவட்ட கல்வி அலுவலா் மீனாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வே.செந்தில்நாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்துமே புரட்சிகரமானவை தான். மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் என்ன எதிா்பாா்க்கிறாா் எனத் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கமல்ஹாசன் வீட்டுக்கும் 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. இது புரட்சிகரமான திட்டம் இல்லையா என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com