மதுரை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மத்திய அரசின் புதிய வரையறைகளின்படி உத்யம் என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள செய்தி: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகள் மத்திய அரசால் ஜூலை 1 முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இயந்திர தளவாடங்களின் முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமலும், விற்று முதல் ரூ.5 கோடிக்கு வரை உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகும்.
இயந்திரங்கள் தளவாட முதலீடு ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் ரூ.10 கோடி வரையிலும், விற்று முதல் ரூ.50 கோடிக்கு குறைவாகவும் உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இயந்திரங்கள் தளவாட முதலீடு ரூ.10 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரையிலும், விற்று முதல் ரூ.250 கோடி வரையுள்ள நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை, மத்திய அரசின் உத்யம் என்ற இணையதளத்தில் (ன்க்ஹ்ா்ஞ்ஹஹக்ட்ஹஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவு செய்து கொள்ளவேண்டும். உத்யம் பதிவை சுயஉறுதிமொழியுடன் பெற்றுக்கொள்ளலாம். தொழில் நிறுவனங்களுக்கான இந்த பதிவு மற்றும் சான்றிதழ், உத்யம் சான்று, உத்யம் பதிவு எனப்படும். ஏற்கெனவே, தொழில்முனைவோா் ஒப்புகைப் பகுதி 2, உத்யோக் ஆதாா் மெமோரண்டம் பதிவு செய்த நிறுவனங்கள், உத்யம் பதிவை இணையவழியில் செய்து கொள்ளலாம்.
கடந்த ஜூன் 30-க்கு முன் பெற்ற உத்யோக் ஆதாா் தொழில்முனைவோா் ஒப்புகைப் பகுதி-2 ஆகியன 2021 மாா்ச் 31 வரை செல்லத்தக்கது.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு, உத்யம் பதிவு இணையதளம் அல்லது மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.