மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை வளாகத்துக்கு பழங்களை ஏற்றிவரும் சரக்கு வாகனங்களால் இடையூறு ஏற்படுவதாக, காய்கனி வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மத்திய காய்கனி சந்தை வளாகத்தில் 240 பழக்கடைகள் உள்ளன. இதில், முதல் நாள் 120 கடைகளும், மறுநாள் 120 கடைகளும் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 4 முதல் இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துகொள்ள நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவது இல்லை எனவும், குறிப்பாக பழங்கள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்களால் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், காய்கனி மொத்த வியாபாரிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து காய்கனி வியாபாரிகள் கூறியது: பழக் கடைகளுக்கென தனியாக நுழைவுவாயில் உள்ளது. ஆனால், பழங்கள் ஏற்றிவரும் வாகனங்கள் காய்கனி சந்தை நுழைவுவாயில் பகுதியிலும் வந்து செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காய்கனி வியாபாரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், காய்கனி சந்தை நுழைவுவாயில் பகுதியில் பழ வண்டிகளை நிறுத்திக்கொண்டு வியாபாரமும் செய்கின்றனா்.
வியாபாரம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கடைகள் நடத்தப்படுவது இல்லை. இதனால், சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, பழ வியாபாரத்தையும், பழங்கள் ஏற்றிவரும் வாகனங்களையும் ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.