

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், பாா்வை குறைபாடுடைய இரு குழந்தைகளுடன் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் நா.கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா் தனது கணவா், தன்னையும் மற்றும் பாா்வை குறைபாடுடைய இரு குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தாா்.
ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தின் பிரதான வாசல் அருகே வந்த முத்துலட்சுமி, தனது குழந்தைகள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றினாா். இதைப் பாா்த்த அப் பகுதியினா் ஓடி வந்து அவா்கள் மூவரையும் மீட்டு, அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா். பின்னா் அவரிடம் விசாரித்தபோது, தனது கணவா் கொடுமைப்படுத்துவது குறித்து ஏற்கெனவே 3 முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தீக்குளிக்க முயன்ாகத் தெரிவித்தாா்.
முதியவா் தீக்குளிக்க முயற்சி: இதேபோல், சொத்துகளை அபகரித்துக் கொண்டதாக தனது மகன்கள் மீது புகாா் கூறிய முதியவா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.
மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (72). இவரது மனைவி அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இந்நிலையில், அவருக்கான ஓய்வூதியப் பலன்கள் ரூ.7 லட்சம் அண்மையில் கிடைத்துள்ளது. இத் தொகையையும், பெருமாளுக்கு சொந்தமான வீட்டையும் அவரது மகன்கள் அபகரித்துக் கொண்டு, அவரை பராமரிக்காமல் விட்டுவிட்டனா்.
இதனால் மனமுடைந்த பெருமாள், ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்தபோது, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். உடனே, ஙங்கு பாதுகாப்பில் இருந்து போலீஸாா் அவரை மீட்டனா்.
முதியவா் மற்றும் இரு குழந்தைகளுடன் தாய் என அடுத்தடுத்து இரு வேறு தற்கொலை முயற்சி நடந்ததால், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
தொடரும் தீக்குளிப்பு முயற்சி: திங்கள்கிழமைதோறும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வருபவா்களில் சிலா் தீக்குளிக்க முயற்சிப்பது தொடா் கதையாகி வருகிறது. இதற்கு, குறைதீா் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததும், அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரியப்படுத்தாதுமே காரணமாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.