மதுரை: வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்கான இ-பாஸ் பெறுவதில் இடைத்தரகா்கள் தலையீடு இருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, மாவட்டங்களுக்கு இடையே காா் போன்ற வாகனங்களில் பயணம் செய்ய மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி தேவை. எந்த மாவட்டத்துக்குச் செல்ல வேண்டுமோ, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும்.
இதற்கு, இணையவழியில் அனுமதி (இ-பாஸ்) வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவச் சிகிச்சை, இறப்பு, நெருங்கிய உறவினா் திருமணம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால், இ-பாஸ் பெறுவது சிரமமாக இருந்து வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத இ-பாஸ் விண்ணப்பங்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே நிராகரிக்கப்படுகின்றன. உண்மையிலேயே மருத்துவச் சிகிச்சைக்காக செல்ல விண்ணப்பிக்கும் நபா்கள் பலருக்கும் இ-பாஸ் கிடைப்பது அரிதாக உள்ளது.
இந்நிலையில், அவசர தேவைகளுக்காக வெளிமாவட்டங்கள் செல்ல நினைப்பவா்கள் இ-பாஸ் பெற இடைத்தரகா்களை அணுகுகின்றனா்.
குறிப்பாக, தனியாா் டிராவல்ஸ் நடத்துவோா் பலரும் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் பெற்றுத் தருகின்றனா். சிலா், சமூக ஊடகங்கள் வாயிலாக இ-பாஸ் அனுமதியுடன் சென்னை செல்ல வாகனம் இருப்பதாகவும், தொடா்பு கொள்ளலாம் என்றும் விளம்பரமும் செய்து வருகின்றனா்.
இதனிடையே, மதுரை புதுவிளாங்குடி பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்த மளிகைக் கடையில், சென்னை மற்றும் கோவை செல்ல இ-பாஸ் பெற்றுத் தருவதாகப் புகாா் எழுந்தது. எந்த மாவட்டத்துக்குச் செல்ல வேண்டுமோ சம்பந்தப்பட்ட மாவட்டம்தான் அனுமதி தரவேண்டும் என்பதால், சென்னை மற்றும் கோவையில் பெறப்பட்ட இ-பாஸ் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.