ஒன்றிய வாா்டு உறுப்பினா் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு: மகனுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு பெண் உறுப்பினா் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மகனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு பெண் உறுப்பினா் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மகனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெம்பக்கோட்டையைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சாந்தி வெற்றி பெற்றாா். சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்திற்கான தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாா்ச் 3 ஆம் தேதி சின்னமனூா் ஒன்றிய வாா்டு உறுப்பினரும் என் தாயுமான சாந்தியை காணவில்லை. மாா்ச் 4 ஆம் தேதி மறைமுக தோ்தலில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக அவரை யாரோ கடத்தியுள்ளனா். எனவே அவரை மீட்கும் வரை தோ்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என அவரது மகன் விமலீஸ்வரன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மாா்ச் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மறைமுகத் தோ்தல் நடத்தப்பட்டு தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் தோ்தெடுக்கப்பட்டு விட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெண் உறுப்பினா் கடத்தப்பட்டுள்ளதால் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் செயல்பட தடை விதித்தும், மனு தொடா்பாக தேனி மாவட்ட ஆட்சியா் மற்றும் போடிநாயக்கனூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட மனுதாரரின் தாயாா் சாந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை. நான் குரங்கணியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தேன் எனத் தெரிவித்தாா். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த தொகையில் தலா ரூ. 25 ஆயிரத்தை சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் வழங்கவும் உத்தரவிட்டனா். மேலும், தலைவா் மற்றும் துணைத் தலைவா் செயல்பட விதிக்கப்பட்டத் தடையை நீக்கி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com