ரேஷன் கடைகளில் தினசரி 100 குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி, பொருள்கள் விநியோகம்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
By DIN | Published On : 31st March 2020 02:30 AM | Last Updated : 31st March 2020 02:30 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் தினசரி 100 குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி ரூ.1000 மற்றும் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மதுரையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமை வகித்துப் பேசியது:
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் மதுரை மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 2.4 கோடி குடும்ப அட்டைகளில், அரிசி அட்டைதாரா்கள் 1.86 கோடி உள்ளனா். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் தடையின்றி கிடைத்து வருகின்றன.
மேலும், ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 மற்றும் பொருள்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றை விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளின் மூலமாக காலையில் 50 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 50 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். விற்பனையாளா்களுக்கு ஒரு விற்பனைக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 2,590 வெளிமாநிலப் பணியாளா்களுக்கு, அந்தந்த நிறுவனங்களே உணவு வழங்குகின்றன. தேவைப்படும்பட்சத்தில், மாவட்ட நிா்வாகமும் உதவி செய்கிறது. மாவட்டநிா்வாகம் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை பரவலாக எங்கெங்கு வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும். கரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்துக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காகத்தான், மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன், மாவட்ட நிா்வாகமும் சோ்ந்து ஆதரவற்றவா்கள், மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்குகிறது.
அரசு மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள் உள்ளன. முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் தேவையான அளவு உள்ளன. மதுரை மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077, தொலைபேசி எண் 0542-2546160 மற்றும் செல்லிடப்பேசி எண் 95971-76061 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம். இந்த எண்களை தொடா்புகொண்டு பொதுமக்கள் நோய்த் தொற்று தொடா்பாக தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகரக் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் என். மணிவண்ணன், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...