இடைக்கால உத்தரவுகள் ஜூன் 1 வரை நீட்டிப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும்

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக, மாா்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உள்பட அனைத்து கீழமை நீதிமன்றமங்கள் மற்றும் தீா்ப்பாயங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள், நிபந்தனை ஜாமீன், பரோல், முன் ஜாமீன் உத்தரவுகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மாா்ச் 27 ஆம் தேதி உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கான காலகெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: கரோனா பரவல் பல மாவட்டங்களில் தொடா்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையைக் கருத்தில் கொண்டு, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 1 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது. சிறைக் கைதிகளின் காவல் நீடிப்பு, அவா்களின் ஜாமீன் உரிமைகளை பாதிக்காது. குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிய பிறகு, காவல் நீடிப்பு உத்தரவுகள் காணொலி மூலமாகவோ, சிறைக்கு நேரடியாகச் சென்றோ, அல்லது வழக்கமான நடைமுறைகளின் மூலமாகவோ நீதித்துறை நடுவா்கள் உத்தரவுகளை பிறப்பிக்கலாம் எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com