

இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார்.
மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டைத் தொடங்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியது: பாஜக என்பது ஆர்.எஸ்.எஸ்சின் கருவி
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை நாசப்படுத்தும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. மோடி பிரதமரான உடன் அரசியலுக்கு ஆர்எஸ்எஸ் வந்துள்ளது. இது பாசிச ஆட்சியை உருவாக்க முயற்சிக்கிறது, இதுதான் இந்துத்துவா என்கின்றனர்.
மனுதர்ம ஆட்சியை உருவாக்க வேண்டும் எனண்ணத்தோடு பாஜக அரசு செயல்படுகிறது. இது மதசார்பின்மையை குழிதோண்டி புதைக்கிறது. நரேந்திர மோடி பிரதமரானவுடன் இந்திய வளங்கள், உற்பத்தியை சில பெரு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்கி செயல்படுகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படட வேண்டும் என எந்த பிரதமரும் பேசாத ஒன்றை மோடி பேசுகிறார். பாதுகாப்பு துறை, வங்கி உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்பட உள்ளது. இந்தியாவின் செல்வங்களை உயர்த்தும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என கூறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் சொல்வது செல்வங்களை உற்பத்தி செய்பவர்கள் மக்கள்.
ஆனால் அவற்றை அம்பானி, அதானிகளுக்கு தாரை வார்ப்பது நீங்கள். மோடி அரசு மக்களால் ஆன அரசாக இல்லை, பெரும் முதலாளிகளுக்கான அரசாக செயல்படுகிறது. விவசாயிகள் போராட்டம் வீறுகொண்டு எழுந்துள்ளது. மோடி அரசு அவர்களை பற்றி கவலைப்படுவதாக இல்லை, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் இந்திய நலனுக்கு எதிரானது என விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் அதை மோடி கண்டுகொள்ளவில்லை. பிரதமர் மோடி காரல் மார்க்ஸை படிக்க வேண்டாம். ஆனால் ஆடம்ஸ்மித் எழுதிய வெல்த் ஆப் நேசன் புத்தகத்தை தெரிந்துகொள்ள வேண்டும். உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டும் கார்ப்பரேட்டை வளர்க்கும் மத்திய அரசு தேவையா? ஒரு பக்கம் பாசிச அரசு மற்றொரு பக்கம் கார்ப்பரேட் ஊக்கம் என்பது மோடியின் கொள்கையாக உள்ளது.
மோடி அரசை தூக்கி எறிந்தால்தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதிமுக அரசு பாஜகவின் எடுபிடி அரசாக செயல்பட தமிழ் மக்கள் அனுமதிக்கலாமா? மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசில் மாநில உரிமை நலன் காப்பாற்றபடவில்லை, மாநில உரிமைகள் பட்டியலில் உள்ள கல்வி, வேளாண்மை துறைகளில் மாநில அரசை கேட்காமலயே மத்திய அரசு மாற்றம்கொண்டுவருகிறது. இந்திய கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு செயல்படுகிறது. பொதுத்துறை தனியார்மயமாவது உழைக்கும் வர்க்கத்தினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல். போராடி பெற்ற இட ஒதுக்கீடு மீதான தாக்குதல் வரும் போது தமிழக அரசு எதிர்ப்புகுரல் கூட எழுப்பவில்லை.
மாநில நலன் காக்க அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதே இல்லை. ஆளும் எடப்பாடி அரசு அரசியல் பிழைகளை செய்துவருகிறது. இவர்களை சரித்திரம் கூட மன்னிக்காது. வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் மூலம் இவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியடையும் என்பதால் மோடி அனைத்து மாநிலங்களிலும் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநிலங்களில் பாஜகவிற்கு கிடைக்கும் தோல்வி மோடியின் தோல்விக்கான தொடக்கமாக இருக்க வேண்டும். உரிமைக்காக போராடுபவர்களை போராட்ட ஜீவிகள் என கொச்சைபடுத்துகிறார்.
தற்போதைய மத்திய அரசால் வாழ்வதற்காக போராடும் நிலை உள்ளது. அம்பானி, அதானிக்கு அடிமை ஜீவிகளாக மோடி உள்ளார். வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதனோடு கூட்டணிவைக்கும் அனைத்து கட்சிகளை வீழ்த்த வேண்டும். தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள், இது பெரியார் மண் இங்கு மதவெறி அரசியல் வெற்றி பெறாது, பாஜக வீழும். வள்ளுவர், பிசிராந்தையார், ஔவையாரை மோடி மேற்கோள் காட்டலாம். ஆனால் அது போன்று நடக்கவில்லை. அரசை கேள்வி கேட்டாலோ, விமர்சனம் செய்தாலோ தேச விரோதி என்று கூறி ஜனநாயகத்தை நாசப்படுத்திவிட்டது. இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் காப்பாற்ற வேண்டும் எனில் பாஜக அதிமுக வீழ்த்தபட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.