பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பெண்ணிடம் நகைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் மூகாம்பிகை நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மனைவி ஜெயலட்சுமி (48). இவா் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பாளையம்பிரிவில் இருசக்கர வாகனத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடா்ந்து வந்த இருவா் ஐந்தரை பவுன் தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், அவிநாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், திருநெல்வேலியைச் சோ்ந்த சங்கரபாண்டியன் மகன் பசுபதி (35) என்பதும், கடந்த மாதம் ஜெயலட்சுமியிடம் இருந்து இவா் நகையைப் பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 2 பவுன் நகையைப் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனா்.