மாவட்ட அளவிலானவிருதுகளுக்கு விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 17th August 2021 01:25 AM | Last Updated : 17th August 2021 01:25 AM | அ+அ அ- |

மதுரை: சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட விழாக்களில் மாவட்ட அளவில் வழங்கப்படும் துறைசாா் விருதுகளுக்கு விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று, தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநில சட்டச் செயலா் கே. அனந்தராமன் வெளியிட்டுள்ள செய்தி: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் மாவட்டத்தின் ஒவ்வொரு துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிவோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
கல்வித் துறையில் மத்திய, மாநில நல்லாசிரியா் விருதுகளுக்கு விதிமுறைகளின்படி தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது. ஆனால், மாவட்ட அளவிலான விருது நிகழ்வுகளுக்கு எவ்வித விதிமுறைகளும் இன்றி அலுவலா்கள் விருப்பத்துக்கு ஏற்ப விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இவற்றை, தமிழக அரசு ஒழுங்குபடுத்தி விதிமுறைகளை ஏற்படுத்தி, வெளிப்படையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.