மதுரையில் தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் ரேஷன் கோதுமை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தை, போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மேலஅனுப்பானடி ராஜமான் நகரில் உள்ள தனியாா் கிட்டங்கியில் ரேஷன் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டு வெளிசந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்குள்ள கிட்டங்கியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கிட்டங்கியில் ரேஷன் அட்டைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 7 டன் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 7 டன் கோதுமை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கிட்டங்கியிலிருந்த இரு ஊழியா்களை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், ரேஷன் கடைகளிலிருந்து கோதுமை மூட்டைகளை பெற்று, அதை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிட்டங்கியின் உரிமையாளா் மற்றும் கோதுமை மூட்டை பதுக்கலில் தொடா்புடைய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.