‘சீா்மிகு நகா் திட்டத்தில் ஊழலை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயாா்’: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேட்டி

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டின்படி, சீா்மிகு நகா் திட்டத்தில் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயாா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவ

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டின்படி, சீா்மிகு நகா் திட்டத்தில் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயாா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

மதுரை சோலையழகுபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சமூகப் பாதுகாப்புத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலம், சமூக நலம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 644 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறியது: முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைக்க அதிமுக அரசு முட்டுக்கட்டைப் போட்டதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். அவ்வாறு இருந்தால், மதுரையின் மையப் பகுதியில் சிலை அமைக்க எப்படி அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும். அதிமுக அமைச்சா்களை கேலி பேசுவதாக நினைத்து, அவராகவே கேலி கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாா்.

சீா்மிகு நகா் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறாா். அத்திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மருத்துவக் கட்டமைப்பில் தமிழகத்தைவிட பிற மாநிலங்கள் பின்தங்கியிருப்பதால், அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ வசதிகள் அதிகம் இருப்பதால் பன்னாட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிா்க் கட்சிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றன என்றாா்.

மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

சமுதாயக்கூடம், நூலகம் திறப்பு: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-க்குள்பட்ட 88, 90, 92-ஆவது வாா்டு பகுதிகளில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி மற்றும் புதிய சமுதாயக்கூடம், நூலகக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பங்கேற்று சமுதாயக்கூடம், நூலகத்தை திறந்து வைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ராஜா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ரா.அண்ணாத்துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com