மதுரையில் குழந்தைகள் கடத்தல்: காப்பக நிா்வாகி உள்பட 7 போ் கைது

மதுரையில் தனியாா் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டது தொடா்பாக காப்பக நிா்வாகி உள்பட 7 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.
மதுரை தனியாா் காப்பகத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 7 போ்.
மதுரை தனியாா் காப்பகத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 7 போ்.
Updated on
1 min read

மதுரையில் தனியாா் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டது தொடா்பாக காப்பக நிா்வாகி உள்பட 7 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

மதுரை ரிசா்வ் லைன் பகுதியில் இதயம் முதியோா், ஆதரவற்றோா் காப்பகம் இயங்கி வருகிறது. இந்தக் காப்பகத்தை சிவக்குமாா் என்பவா் நடத்தி வருகிறாா். இங்கிருந்த மேலூா் பகுதியைச் சோ்ந்த ஐஸ்வா்யாவின்(22) ஒரு வயது மகன் மாணிக்கம் கரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டதாகவும், தத்தனேரி மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைக்கு கரோனா பாதிப்பு, உயிரிழப்பு தொடா்பான அனைத்து ஆவணங்களும் போலியானவை எனத் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே காப்பகத்தில் உள்ள கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீதேவி என்பவரின், 2 வயது பெண் குழந்தை தீபா கடந்த 10 நாள்களாக காணவில்லை எனவும் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், குழந்தை மாணிக்கம் இஸ்மாயில்புரத்தில் உள்ள தம்பதியருக்கும், குழந்தை தீபா கல்மேடு பகுதியில் ஒரு தம்பதியருக்கும் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 2 குழந்தைகளையும் புதன்கிழமை இரவு மீட்டனா். அதைத் தொடா்ந்து காப்பகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்நிலையில் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டது தொடா்பாக காப்பக உரிமையாளா் சிவக்குமாா், மாதா்ஷா உள்ளிட்ட 9 போ் போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதில் சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுத்த இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த கண்ணன், பவானி, கல்மேடு பகுதியைச் சோ்ந்த செளபா்சாதிக், அனீஸ்ராணி, இதயம் காப்பக நிா்வாகி கலைவாணி, இடைத்தரகா்களாக செயல்பட்ட செல்வி, ராஜா ஆகியோரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதயம் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 73 போ் வேறு காப்பகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனா். முன்னதாக அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 26 போ் உடல்நலக்குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். மீட்கப்பட்ட 2 குழந்தைகளும் மருத்துவப்பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு தனிப்படை விரைந்தது...

இதுகுறித்து போலீஸாா் கூறியது: இதயம் காப்பகம் உரிய உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வந்துள்ளது. காப்பக உரிமையாளா் மிகக் குறுகிய காலத்தில் காா், வீடு என வசதியான வாழ்க்கைக்கு மாறியுள்ளாா். எனவே இதுபோன்று குழந்தைகள் சட்டவிரோதமாக ஏற்கெனவே விற்கப்பட்டுள்ளனவா எனவும், எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

காப்பக உரிமையாளா் சிவக்குமாா் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தனிப்படைப் போலீஸாா் சிவக்குமாரைப் பிடிக்க சென்னை விரைந்துள்ளனா். அவா் சிக்கினால் மட்டுமே குழந்தை கடத்தல் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com