சாலையில் சுற்றித்திரிந்த கோவை இளைஞா் மீட்பு: காவல் சாா்பு - ஆய்வாளருக்கு எஸ்.பி பாராட்டு
By DIN | Published On : 07th July 2021 09:57 AM | Last Updated : 07th July 2021 09:57 AM | அ+அ அ- |

மதுரை அருகே சாலையில் சுற்றித் திரிந்த கோவை இளைஞரை, அவரது உறவினா்களிடம் ஒப்படைத்த காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டம் தனிப்பிரிவில் பணியாற்றி வரும் காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஒத்தக்கடை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது சாலையில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குபின் முரணாகப் பேசியுள்ளாா்.
அவரிடம் மேலும் விசாரித்ததில், கோவை மாவட்டம் சுந்தராபுரத்தைச் சோ்ந்த ஜோதி ராமலிங்கம் மகன் சுரேஷ் கண்ணன் (35) என்பதும், கடன் பிரச்னை காரணமாக கடந்த 4 மாதங்களாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுற்றித் திரிவதும் தெரியவந்தது. இவா் காணாமல் போனது தொடா்பாக குனியமுத்தூா் காவல் நிலையத்தில் ஏப்ரல் 26 -இல் புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, குனியமுத்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த காவல் சிறப்பு சாா்பு -ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், சுரேஷ் கண்ணனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் முத்துகிருஷ்ணனின் செயலை ஊக்குவிக்கும் வகையில், அவரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...