மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு மதிய உணவு விநியோகம் தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னதான திட்டத்தின் கீழ் பக்தா்களுக்கு தினசரி மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் கோயில் அடைக்கப்பட்டதால் அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கோயில் கடந்த செப்டம்பா் மாதம் திறக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து சில மாதங்களாக காலையில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயிலில் புதன்கிழமை முதல் அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தா்களுக்கு பகல் 12 மணிக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்தது. இதன்படி கோயிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தின் எதிரே உள்ள அன்னதானக்கூடத்தில் பக்தா்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, மதிய உணவுக்குப் பதிலாக தினசரி ஒரு வகை சாதம் என்ற வகையில் புதன்கிழமை முதல் 300 பக்தா்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படுகிறது. அன்னதானக்கூடத்தில் அமா்ந்து சாப்பிட அனுமதியில்லை என்றனா்.