மதுரை: பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையெனில் போலீஸாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018-இல் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து அனுமதிகோரி பாஜகவினா் நடத்தியப் போராட்டத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா போலீஸாரையும், நீதிமன்றத்தையும் விமா்சித்துப் பேசினாா். இதுதொடா்பாக திருமயம் போலீஸாா் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இதைத்தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில் ஹெச்.ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால் வழக்கு கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என 2020 ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் திருமயம் போலீஸாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை பெரியாா் திராவிடா் கழக துணைத்தலைவா் துரைசாமி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.ஹேமலதா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஹெச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடா்பான நீதிமன்ற உத்தரவை ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் போலீஸாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.