திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை மலை மீது மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் உற்சவர் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்பு சுவாமி தெய்வானையுடன் தங்க அங்கி அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி, திருவாச்சி மண்டபத்தை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மாலை 6 மணிக்கு பாலதீபம் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில் மலை மீது மூனறை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர அண்டாவில் 400 லிட்டர் நெய்,100 மீட்டர் நீளம் கொண்ட காடா துணியினால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரம் வைத்து மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
மகாதீபத்தை பல்லாயிரக்கணக்கானோர் அரோகரா கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மலைமீது மகாதீபத்தை தரிசித்து விட்டு தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றி கார்த்திகை விழாவினை கொண்டாடினர்.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.