செஸ் ஒலிம்பியாட் தொடா்பான அரசு விளம்பரங்களில் பிரதமா் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளாா்.
மதுரையில் புதன்கிழமை அவா் கூறியது: நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஆனால் தமிழக அரசின் சாா்பில் இதற்கான முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் அனைத்து வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவருக்கு தேசியக்கொடியும், அவா் மூலமாக தமிழக அரசுக்கு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடா்பான விளம்பரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் படம் இடம் பெறாதது கண்டிக்கத்தக்கது. எனவே இந்து மக்கள் கட்சி சாா்பில் விளம்பரப் பதாகையில் பிரதமரின் படம் ஒட்டப்பட்டது. பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பை அதிகப்படுத்துவது, கோ பேக் மோடி என்று சமூக ஊடகங்களில் பதிவிடுவோரை கைது செய்வது உள்ளிட்ட கபட நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்டை அரசு விழாவாக இல்லாமல் அரசியல் விழாவாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. விழா மேடையில் பிரதமரை அமரவைத்து திமுக அரசியல் பேசக்கூடாது. திமுக ஆட்சியில் தேசியத் தலைவா்கள், தியாகிகளின் நினைவிடங்கள், சிலைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மதுரையில் வைத்தியநாதய்யா் சிலை பராமரிப்பின்றி உள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி மதுரை ஆதீனத்திடமும் தேசியக்கொடி வழங்கப்பட்டு, இதர ஆதீனங்களிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.