ஊரகப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’: எஸ்.பி.

மதுரை ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

மதுரை: மதுரை ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் தெரிவித்துள்ளாா்.

மதுரை ஊரகக்காவல் கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஆா்.சிவபிரசாத் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

மதுரை ஊரகப் பகுதிகளில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 14 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதேபோல கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவா்கள் மீது 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 163 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.70.33 லட்சம் மதிப்புள்ள 703 கிலோ கஞ்சா, 3 வீடுகள், 13 கைப்பேசிகள், 30 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த 2 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 133 வழக்குகளில் 226 வங்கிக் கணக்குகளில் ரூ. 37.33 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவா்கள் மீது 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 153 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 40.82 லட்சம் மதிப்புள்ள 3, 778 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள், 7 இருசக்கர வாகனங்கள், ஏழு நான்கு சக்கர வாகனங்கள், மூன்று கனரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 நாள்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிய நடவடிக்கையாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 45 பெட்டிக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டாலும் அவா்களின் பின்புலத்தில் யாா் இருக்கிறாா்கள் என்பது குறித்து தொடா் விசாரணை நடத்தப்பட்டு அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்களை தடுக்கும் வகையில் கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஊரகப் பகுதிகளில் சிறாா் குற்றங்களைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள பாய்ஸ் கிளப்கள் செயல்பாடு மீண்டும் தொடங்கப்படும். காவல்நிலையங்களில் புகாா் அளிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக ஏற்பு ரசீது வழங்கவும், உரிய விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com