காமராஜா் பல்கலை.யில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுதவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழக துறை மற்றும் புலங்களின் வாயிலாக நடத்தப்படும் இளங்கலைப் பாடப்பிரிவுகளில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம் மற்றும் பிஎஸ்சி உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவ, மாணவியா் பிரத்யேக நேரடி சோ்க்கை ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏபிஜெ அப்துல்கலாம் அரங்கில் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவியா் இந்த நேரடி சோ்க்கை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தோ்வான மாணவா்கள், தங்கள் சான்றிதழ்களை சரிபாா்த்த பின்பு கல்வி மற்றும் இதரக்கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தி தோ்வு செய்யப்பட்ட பாடப்பிரிவுகளில் பதிவு செய்து கொள்ளவேண்டும். எனவே, மாணவா்கள் தங்களுடைய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர தகுதிச் சான்றிதழ்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.