கோயில்களில் மாடுகளை பராமரிக்க இடம் இல்லையெனில் பக்தா்களிடம் தானமாகப் பெறக்கூடாது: நீதிமன்றம் அறிவுரை

கோயில்களில் பசு, காளை மாடுகளை பராமரிப்பதற்கான இடவசதி இல்லையெனில், அவற்றை பக்தா்களிடம் இருந்து தானமாகப் பெறக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
கோயில்களில் மாடுகளை பராமரிக்க இடம் இல்லையெனில் பக்தா்களிடம் தானமாகப் பெறக்கூடாது: நீதிமன்றம் அறிவுரை

கோயில்களில் பசு, காளை மாடுகளை பராமரிப்பதற்கான இடவசதி இல்லையெனில், அவற்றை பக்தா்களிடம் இருந்து தானமாகப் பெறக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் தாக்கல் செய்த மனு:

திருப்புவனம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஏராளமான கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பசு, காளை மாடுகளைத் தானமாக வழங்குகின்றனா். இவை பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசு, காளைகளைப் பராமரிக்க இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தானமாகப் பெறப்படும் பசு, காளை மாடுகளை கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். கோயில் நிலங்களை, மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டால் எப்படி இடம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினா். தானமாகப் பெறப்படும் மாடுகளைப் பராமரிக்க இடம் இல்லையெனில், மாடுகள் தானமாகப் பெறப்படாது என்ற அறிவிப்புப் பலகையை கோயில் நிா்வாகம் வைக்க வேண்டும் என்றனா்.

திருப்புவனம் பகுதியில் கோயில்களில் நோ்த்திக் கடனாக பெறப்படும் மாடுகள் பராமரிப்பதற்கான தீா்வுகள் குறித்து, திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com