தருமபுரம் ஆதீன இயலிசைப் புலவரும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் தல ஓதுவாருமான வித்துவான் தா. குருசாமி தேசிகர் (92) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை மதுரையில் காலமானார்.
மதுரை, வடக்குமாசி வீதியைச் சேர்ந்த இவர், தருமபுரம் ஆதீனத்தில் திருமுறைப் பயின்று, தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர். அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தருமையாதீன 26ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடமிருந்து "ஆதீனப் புலவர்" விருதும், 27 ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடமிருந்து "திருமுறை கலாநிதி" விருதும் பெற்றவர்.
இவைத் தவிர, மதுரை ஆதீனத்தின் "திருநெறிய தமிழ்மணி" விருது, தமிழிசை சங்க விருது என சுமார் 20-க்கும் அதிகமான விருதுகளைப் பெற்றவர். தருமபுரம் மற்றும் மதுரை ஆதீன குருமகா சந்நிதானங்கள், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோராலும், பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்டோராலும் பாராட்டப்பட்டவர். பல்வேறு தினசரி, வாராந்திர, மாத இதழ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர்.
பல நூல்களை இயற்றியவர். பல கல்வெட்டுகளைக் கண்டறிந்தவர். இவருக்கு மகன் மணிகண்ட ஓதுவார், மகள்கள் மங்கையர்கரசி, செண்பகவல்லி உள்ளனர். இறுதிச் சடங்குகள் மதுரை, வடக்குமாசி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடர்புக்கு : 98651 31969