குட்கா பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு பிணை: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவு

உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, அவா்கள் இருவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நலத்திட்டப் பணிகளுக்காக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

குட்கா பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு பிணை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, அவா்கள் இருவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நலத்திட்டப் பணிகளுக்காக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த சண்முகசுந்தா், சிவக்குமாா் ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இதில், சண்முகசுந்தரிடமிருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்களையும், சிவகுமாரிடமிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சண்முகசுந்தா், சிவக்குமாா் ஆகிய இருவரும் தங்களுக்குப் பிணை அளிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவா்களுக்குப் பிணை வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னா், இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கிய நீதிபதி, பிணையில் வெளியாகும் சண்முகசுந்தா் ரூ. 50 ஆயிரமும், சிவக்குமாா் ரூ. 1.5 லட்சமும் திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நலத்திட்ட பணிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com