மதுரை: மதுரையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுத்திய துணை மேயரின் முகநூல் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட துணை மேயர் நாகராஜனின் சொந்த வார்டு பகுதியான 80-வது வார்டு ராஜிவ்காந்தி தெருவில் மழைநீர் தொட்டி அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடைப்பை நீக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தூய்மைப் பணியில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்துவது போன்ற புகைப்படத்தை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பாதுகாப்பு உபகரணமின்றி ஈடுபடுத்தியதாக ஏற்கனவே மேயருக்கு தூய்மை பணியாளர்கள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது துணை மேயரும் இது போன்ற சர்ச்சையான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.