அரசியலுக்கு வருவீங்களா?: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பதில்
By DIN | Published On : 19th June 2022 06:17 PM | Last Updated : 19th June 2022 07:12 PM | அ+அ அ- |

நல்ல விஷயங்களை சொல்வதும் செய்வதும் அரசியல் வேலைதான் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய ஹிட்டான படம் பதாய் ஹோ. இப்படத்தை தற்போது வீட்ல விசேஷம் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்து ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் திரைப்பட புரமோஷனுக்காக மதுரை வந்துள்ள நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இயக்குனர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், கடந்த ஒரு வருடமாகவே 500 கோடி, 1000 கோடி படங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்ற நிலை மாறி உள்ளது. நல்ல படம் செய்தால் மக்கள் சைஸ் பார்க்க மாட்டாகள். வீட்ல விசேஷம் படம் வெளியாவதற்கு முன்பே எங்களுக்கு லாபத்தை கொடுத்த படம். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நல்ல வரவேற்பை வீட்ல விஷேசம் திரைப்படம் பெற்றுள்ளது. திரையரங்குகளில் பொதுமக்கள் பயங்கரமாக கைதட்டி ரசித்து பார்த்தார்கள்.
ஊடகவியலாளர்கள் கூட பிரிவியூ காட்சிகளில் மகிழ்ச்சியாக கைதட்டி படத்தை ரசித்து பார்த்தார்கள். நாட்டாமைக்கு பிறகு இந்தப்படத்தை பார்ப்பதாக பெண் ஒருவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். குடும்பத்தோடு சேர்ந்து முகம் சுளிக்காத படங்களை கொடுப்பதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பொதுவாக வெளியாகும் தமிழ்த்திரைப்படங்களில் 20-30 கொலைகள் நடக்கும், நானும் சேர்ந்து 40 கொலை பண்ண வேண்டாம் என எண்ணியே இது போன்ற படங்களில் நடித்து வருகிறேன். 50 வயதுக்கு மேல் உள்ள அம்மா, அப்பா மீது மகன், மகள்களுக்கு மரியாதை வர வேண்டும் என்பதற்காக இந்தப்படம் செய்துள்ளேன்.
இதையும் படிக்க- இரண்டாவது குழந்தைக்கு தந்தையானர் நடிகர் நகுல்
பார்க்கிறவர்களுக்கு ஏதோ ஒரு நல்ல விஷயம் கிடைக்கும் என நம்புகிறேன். சகிப்புத்தன்மை இல்லாத உலகத்தில் நாம் இருக்கிறோம். சமூக வலைதளங்களில் கூட எதிர்கருத்து சொல்பவர்களை உடனடியாக பிளாக் செய்கிறோம். ஆனால் குடும்பத்தில் எல்லாவற்றையும் சகித்து கொண்டு இருக்க வேண்டும். நாங்கள் ஜெயிச்சுட்டு தான் இருக்கோம். வீட்ல விசேஷம் படம் எல்லோருக்கு பிடித்திருக்கிறது. எல்லா படமும் வெற்றி பெறும். மக்களுக்கு பிடித்தவாறு நன்றாக படத்தை கொடுத்தால் மட்டும் போதும்.
இளைஞர்களை சீரழிக்கும் வகையிலான வன்முறை, கொலை என சில திரைப்படங்கள் இல்லை, பல திரைப்படங்கள் உள்ளன. அது போன்று இல்லாமல் நல்ல படங்களை செய்ய வேண்டும் என தெளிவாக உள்ளேன். ஓடிடியில் படம் வெளியாவது குறித்த கேள்விக்கு, காலத்திற்கு ஏற்ப புதிது புதிதாக ஏதாவது வந்து கொண்டே இருக்கும். அதற்கு எதிராக நாம் வேலை செய்யக்கூடாது. புதிதாக நிறைய வரும். அதோடு இணைந்து எவ்வாறு
வேலை செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓடிடி, ஆர்டிடி, டிடிடி என நிறைய வந்துகொண்டே இருக்கும். அதனை எப்படி அட்வான்டேஜாக பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ள வேண்டும். படத்தை எடுத்து அதை விற்பது ஒரு வகையில் நல்லது தான் என்றார். விருப்பப்பட்ட நேரத்தில் படங்களை பார்க்க முடிவதால் ஓடிடி நல்லது தான். நான் நடிக்கும் காமெடி காட்சிகளை நானே கண்ணை மூடி பார்க்கும் நிலை தான் உள்ளது. நகைச்சுவை நடிகர்களின் தேவை குறைந்துவிட்டது என இல்லை. அவர்கள் எழுத்து குறைந்துவிட்டது.
விக்ரம் படம் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. லோகேஷ் கனகராஜ் என் நண்பர். அவருக்கு மிக முக்கியமான படம் இது. கேஜிஎப், ஆர்ஆர்ஆர்க்கு உள்ளிட்ட இந்திப் படங்கள் தமிழகத்தில் நன்றாக ஓடுகிறது என்பதற்கு பதில் அளிப்பது போல தமிழில் வெளியான விக்ரம் படம் இருந்தது. பயங்கர ஆக்க்ஷன் படங்கள் பார்த்து உட்கார்ந்திருந்த மக்கள் காமெடியாக படம் பார்க்கவே இந்தப்படம் உருவானது. இந்தியில் மட்டுமே மல்டி ஸ்டார்ஸ் படங்கள் வரும் நிலையில் தமிழில் மல்டி ஸ்டார்ஸ் கொண்ட படம் வந்துள்ளது மகிழ்ச்சி.
அரசியலுக்கு வருவிங்களா என்பது குறித்த கேள்விக்கு, நான் இப்போதே அரசியலில் தான் உள்ளேன். நல்ல விஷயங்களை சொல்வதும் செய்வதும் அரசியல் வேலை தான். நல்ல விஷயங்கள் இரண்டை செய்தால் கூட நான் மிகப்பெரிய அரசியல்வாதி. தேர்தல் என்பது எனக்கு பிடிக்காது. திரையரங்கில் உள்ள பத்தில் பத்து பேருக்கும் பிடிக்கும் வகையில் படம் உள்ளது. பெண்கள் தான் வீட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடைந்திருந்தால் அதுவே இப்படத்தின் வெற்றி. வாடி போடி என எந்த இடத்திலும் சொல்லாமல் மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளோம்.
என் படங்களை பார்த்துவிட்டு ராமநாராயணன் போல, பாக்யராஜ் மாதிரி படங்கள் கொடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். காலத்தால் அழியாத காவியம் என சொல்லவில்லை. அந்த நேரத்தில் மக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் படங்களை கொடுத்துள்ளேன் எனப் பேசினார்.