மதுரையை அடுத்த கோவில்பாப்பாகுடி பகுதியில் குறைந்த மின்அழுத்தத்தில் மின்விநியோகம் செய்யப்பட்டதால், பலரது வீடுகளில் மின்சாதனங்கள் பழுதானதாக அப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோவில்பாப்பாகுடியின் ஒரு பகுதியில் ஞாயிறுக்கிழமை (மே 1) மாலையில் மின்தடை ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை வரை குறைந்த மின் அழுத்தப் பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக பலரது வீடுகளில் மின்சாதனங்கள் பழுதாகின. மின்தடை மற்றும் குறைந்த மின்அழுத்த விநியோகம் காரணமாக, மக்கள் இரவு தூக்கமின்றி தவித்தனா்.
இதுகுறித்து இப் பகுதி பொதுமக்கள் கூறியது:
கோவில்பாப்பாகுடியின் ஒரு பகுதிக்கு திருப்பாலை துணை மின்நிலையத்திலிருந்தும் இன்னொரு பகுதிக்கு சமயநல்லூா் துணை மின்நிலையத்திலிருந்தும் மின்விநியோகம் நடைபெறுகிறது. சமயநல்லூா் மின்வழித் தடத்தில், விவசாய நிலங்கள், தோப்புகள் இருக்கின்றன.
இதனால், சிறு மழை அல்லது காற்று பலமாக வீசும் நேரங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால், சமயநல்லூா் மின்நிலையத்தில் இருந்து விநியோகம் பெறக்கூடிய கோவில்பாப்பாகுடியின் முத்தையா நகா், சத்யாநகா், பாக்கிய லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
ஆகவே, கோவில்பாப்பாகுடியின் அனைத்துப் பகுதிகளுக்கும் திருப்பாலை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.