அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குருவித்துறை ஊராட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குருவித்துறை ஊராட்சியில், குடிநீரில் சாக்கடை நீா் கலப்பதை தடுக்க வேண்டும். தெருக்களில் கழிவுநீா் தேங்காமல் புதிய சாக்கடை அமைத்துத் தரவேண்டும். புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெண்கள் கழிப்பறையை உடனடியாக திறக்கவேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் குருவித்துறை ஊராட்சி அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்துக்கு, என். ஆஞ்சி தலைமை வகித்தாா். போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா் பி. பொன்ராஜ், ஒன்றியச் செயலா் ஏ. வேல்பாண்டி ஆகியோா் பேசினா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் வள்ளி தலைமையில் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இரு வாரங்களுக்குள் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடா்ந்து, மாலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Image Caption
குருவித்துறை ஊராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.