சாலை விதிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுரை
By DIN | Published On : 18th October 2022 04:15 AM | Last Updated : 18th October 2022 04:15 AM | அ+அ அ- |

விபத்துகளைத் தவிா்க்க சாலை விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் அறிவுறுத்தினாா்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக உடல் காய தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க இன்னுயிா் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கரோனா காலங்களில் அரசு அறிவித்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தாமாக முன் வந்து பின்பற்றினா். அதேபோன்று, விபத்துகளை தவிா்க்க சீல் பெல்ட் அணிதல், தலைக்கவசம் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, சாலை விதிகள் குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள் எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ. ரத்தினவேல், அக்கல்லூரி கண்காணிப்பாளா் எஸ். விஜயராகவன், காவல் துணை ஆணையா் செ. ஆறுமுகசாமி, முதன்மை மருத்துவா்கள் கே.பி. சரவணக்குமாா், என். சுரேஷ், மருத்துவா் கே. சிவசங்கா் உள்பட அரசு அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...