மீனவக் குடும்பத்தைச் சோ்ந்த பட்டதாரிகள், குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீன் வளத்துறை, சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் மீனவக் குடும்பத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் 20 பேருக்கு குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கிறது.
மீனவக் கூட்டுறவு சங்கம், மீனவா் நலவாரியம் ஆகியவற்றில் உறுப்பினா்களாக உள்ளவா்களின் வாரிசுகள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மீன்வளத் துறையின் இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தாா்.