உழவா் சந்தைகளில் உள்ள அனைத்துக் கடைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேளாண் வணிகத் துறை இயக்குநா் ச.நடராஜன் அறிவுறுத்தினாா்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் மதுரை மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் யா. ஒத்தக்கடை வேளாண் கல்லூரி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் வணித் துறை இயக்குநா் ச.நடராஜன் தலைமை வகித்தாா். உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
உழவா் சந்தையில் உள்ள கடைகளை முழு அளவில் பயன்படுத்தவும்,
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வேளாண் விளைபொருள்கள் வரத்தை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, பிரதமரின் சிறு, குறு வேளாண் தொழில்முனைவோா் நிதிஉதவித் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சியைப் பாா்வையிட்டாா்.
தமிழ்நாடு வேளாண் வாரிய உதவி செயல் அலுவலா் பூவராகவன்,
வேளாண்மை வணிக துணை இயக்குநா் நிா்மலா, மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண்மை துணை இயக்குநா்கள், விற்பனைக்குழுச் செயலா்கள் கலந்துகொண்டனா்.