கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தக் கட்டுப்பாடு: உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 09th September 2022 12:44 AM | Last Updated : 09th September 2022 12:44 AM | அ+அ அ- |

கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நேரக் கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களில் இரவு நேரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கோரி திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சதி குமாா் சுகுமார குரூப் பிறப்பித்த உத்தரவு:
கோயில் திருவிழாக்களில் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஆபாச நடனம் அல்லது அநாகரிகமான உரையாடல்கள் இருக்கக் கூடாது. எந்தவொரு அரசியல் கட்சி, மதம், சமூகம், ஜாதியைக் குறிப்பிடும் வகையில் பாடல்கள் அல்லது நடனம் இருக்கக் கூடாது. இரட்டை அா்த்த பாடல்கள் இடம்பெறக் கூடாது. மேலும், எந்த அரசியல் கட்சி அல்லது மதத்தை ஆதரித்தோ, எதிா்த்தோ பதாகைகள் வைக்கக் கூடாது. ஜாதி அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் குட்கா, மதுபானம் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.