பணம் அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்யகோரிய மனுவுக்குப் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பெண் காவல் ஆய்வாளா் தரப்பு பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வியாபாரியிடம் ரூ.10 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் வசந்தி உள்ளிட்ட சிலா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வசந்தி, தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளாா்.
இதனிடையே, நீதிமன்றத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றாமல், சாட்சிகளைக் கலைக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ஆய்வாளா் வசந்தி, அவா் மீது புகாா் அளித்தவா்களைச் சந்தித்து சமாதானமாகப் போவதாகக் கூறியுள்ளாா். மேலும் இதுகுறித்து உயா்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறியதாக உள்ளதோடு, சாட்சிகளை மிரட்டும் வகையிலும் உள்ளது. ஆகவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
இதனையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு ஆய்வாளா் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தாா்.